மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் புது இருக்கைகள் அமைக்க எதிர்பார்ப்பு
மறைமலை நகர்: மறைமலை நகர் பேருந்து நிலையத்தில் இருக்கைகள் உடைந்துள்ள நிலையில், புதிய இருக்கைகள் அமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். மறைமலை நகர் என்.ஹெச் - -2 எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் பேருந்து நிலையத்திற்கு, தடம் எண் '118, 118ஆர்' உள்ளிட்ட மாநகர பேருந்துகள், சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளை காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு வந்து செல்லும் தொழிலாளர்கள் என, பலதரப்பட்ட மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் உள்ள இரும்பு இருக்கைகள் உடைந்து துருப்பிடித்து உள்ளதால், பயணியர் பேருந்துக்காக நீண்ட நேரம் நின்றபடி காத்திருக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பயணியர் கூறியதாவது: இந்த பேருந்து நிறுத்தத்தில் பயணியர் அமர, மரத்தடியில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த இருக்கைகள் சேதமடைந்து உடைந்து உள்ளதால் பெண்கள், முதியோர் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, இந்த பேருந்து நிலையத்தில் புதிய இருக்கைகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.