உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கால்நடை கிளை மருத்துவ நிலையம் வெங்கிடாபுரத்தில் அமைக்க எதிர்பார்ப்பு

கால்நடை கிளை மருத்துவ நிலையம் வெங்கிடாபுரத்தில் அமைக்க எதிர்பார்ப்பு

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்துார், குருவன்மேடு உள்ளிட்ட ஊராட்சியில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழில்.மறைமலை நகர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வோரும், வீட்டு பால் தேவை மற்றும் கூடுதல் வருமானத்திற்காக கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.இந்த கிராமங்களில் வெள்ளாடு, செம்மறியாடு, பசு, எருமை என, 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.இவற்றுக்கு திடீர் உடல்நல குறைவு, செயற்கை கருவூட்டல் போன்றவற்றுக்கு, அருகில் அரசு கால்நடை மருத்துவமனை இல்லை. இதனால் 10 கி.மீ., தொலைவில் உள்ள பாலுார் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை உள்ளது. இதனால், கொளத்துார் அல்லது வெங்கிடாபுரம் ஊராட்சியில் கால்நடை கிளை மருத்துவ நிலையம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து, கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:கால்நடைகளுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டால், பாலுார் மற்றும் சிங்கபெருமாள் கோவில் கால்நடை மருத்துவமனைக்கு, நீண்ட துாரம் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களை கடந்து அழைத்துச் செல்ல வேண்டி உள்ளது.இதன் காரணமாக, கால்நடைகள் மிரள்கின்றன. நெடுஞ்சாலையில் கால்நடைகளை ஓட்டிச் செல்வது பெரும் சவாலாக உள்ளது.சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது, கூடுதல் செலவு ஏற்படுகிறது.எனவே, அனைத்து கிராம மக்களுக்கும் 5 கி.மீ., துாரத்திற்கு குறைவாக, மையப்பகுதியாக உள்ள கொளத்துார் அல்லது வெங்கிடாபுரம் ஊராட்சியில் அரசு கால்நடை மருத்துவ கிளை நிலையம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை