அகத்தீஸ்வரர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
செய்யூர்:சிறுவங்குணத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. செய்யூர் அடுத்த சிறுவங்குணம் கிராமத்தில் 1,400 ஆண்டுகளுக்கு முன் பல்லவ மன்னர்களால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த அகிலாண்ட நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் ஜோஷ்டா தேவி, சோமாஸ்கந்தர் சிலை , பிரம்மன், விஷ்ணு, சிவன் ஒரே கல்லில் சிலைகளாக செதுக்கப்பட்டு காட்சியளிக்கின்றனர். கோவில் பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து காணப்பட்டது. கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், 1.5 கோடிரூபாயில் திருப்பணி மேற்கொண்டனர். கோவில் குளம் சீரமைக்கப்பட்டு, புதிய விமானம், மண்டபம், விநாயகர், முருகன், அய்யப்பன் மற்றும் நவகிரகங்களுக்கு புதிய சிலைகள் அமைக்கப்பட்டு திருப்பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜை நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்ததை அடுத்து, கும்பாபிஷேக விழா இன்று காலை 10:00 மணிக்கு கோவில் கோபுர விமானத்திற்கும், 10:10 மணிக்கு மூலவருக்கும் நடக்கிறது.