அடக்க விலையில் உரங்களை விற்பனை செய்ய உத்தரவு
செங்கல்பட்டு:விவசாயிகளுக்கு தேவையான உரங்களை இருப்பு வைத்து, அடக்க விலையில் விற்பனை செய்ய வேண்டும் என, தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்டத்தில், சம்பா பருவ சாகுபடி நடைபெற்று வருகிறது. அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரங்களை இருப்பு வைத்து, அடக்க விலையில் விற்பனை செய்திட, அனைத்து தனியார் உர நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.தற்போது, யூரியா 1,889 டன், டி.ஏ.பி., 627 டன், பொட்டாஷ் 180 டன், என்.பி.கே., காம்பளக்ஸ் 1,990 டன், சிங்கிள் சூப்பர் பாஸ்டேட் 237 டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.உரங்களை எம்.ஆர்.பி., எனப்படும் அடக்க விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்பனை செய்தால், விற்பனையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.உரங்கள் விற்பனை செய்வதில் குறைபாடு ஏற்படும்பட்சத்தில், அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் தொலைபேசி எண்: 90037 27899 மற்றும் மாநில உர கட்டுப்பாட்டு மையம் வாட்ஸாப் எண்: 93634 40360 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.