ஆலம்பரைக்குப்பம் - பரமன்கேணி மீனவர்களிடையே அமைதி பேச்சு
செய்யூர், செய்யூர் அடுத்த ஆலம்பரைக்குப்பம் கோட்டை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், கடந்த 9ம் தேதி நாட்டுப்படகில் மீன்பிடித்தனர். இவர்களின் வலை, அங்கு மீன் பிடித்த பரமன்கேணிகுப்பம் மீனவர்களின் வலையில் சிக்கி பிரச்னை ஏற்பட்டு, இரு தரப்பு மீனவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.பின், போலீசார் இரு தரப்பு மீனவர்களையும் சமரசம் செய்து அனுப்பினர்.இந்த சம்பவம், மீனவ கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரு பகுதி மீனவர்களிடமும் நேற்று, செய்யூர் தாசில்தார் சரவணன் தலைமையில், தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சு நடத்தப்பட்டது.முதலில் ஆலம்பரைக்குப்பம் மீனவர்கள் நடந்த சம்பவத்தை விவரித்து, தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.இனிவரும் காலங்களில், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காது என, தாசில்தாரிடம் உத்தர வாதம் அளித்தனர்.பின், பரமன்கேணிகுப்பம் மீனவர்கள் தங்களின் கருத்துகளை முன்வைத்து, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.இரண்டு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிந்த செய்யூர் வட்டாட்சியர் சரவணன், ''இனிவரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என எச்சரித்து, நடந்த சம்பவத்திற்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.