உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கள்ளபிரான்புரத்தில் போராட்டம்

 சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கள்ளபிரான்புரத்தில் போராட்டம்

மதுராந்தகம்: கள்ளபிரான்புரத்தில் புதிதாக அமைக்கப்படும் சாலையில் சிமென்ட் கான்கிரீட்டால் பாலம் அமைக்க கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அருகே கள்ளபிரான் புரம் ஊராட்சி உள்ளது. இங்கு கள்ளபிரான் புரத்திலிருந்து நெய்குப்பி வரை செல்லும் சாலை உள்ளது. சாலை மிகவும் மோசமடைந்து, பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்ததால், சாலையை புதிதாக அமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்தின் மூலமாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதனால், கள்ளபிரான் புரம் - நெய்குப்பி வரையிலான 4.5 கிலோ மீட்டர் துாரத்திற்கு, நபார்டு திட்டத்தின் கீழ் 5.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக புதிதாக தார்சாலை அமைக்கும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. இந்நிலையில், கள்ளபிரான்புரம் அருகே சாலையின் குறுக்கே, விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் சிறிய பாசன கால்வாய் உள்ளது. இந்த சாலையின் குறுக்கே, சிமென்ட் கான்கிரீட்டால் சிறிய பாலம் அமைத்து, பின் சாலை அமைக்கக் கோரி, அப்பகுதி மக்கள், நேற்று சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். மேலும், சாலையின் குறுக்கே, சிறிய கான்கிரீட் பாலம் அமைத்தால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து, சாலை பணிகளை தடுத்து நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கிராமப்புற சாலை மேம்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் கூறியதாவது: கள்ளபிரான்புரம் -நெய்குப்பி இடையேயான 4.5 கிலோ மீட்டர் சாலையில், 11 சதுர வடிவ சிமென்ட் கான்கிரீட் பாலங்கள் உள்ளன. அந்த கல்வெட்டுகள் அனைத்தும் கட்டி முடிக்கப்பட்டன. கல்வெட்டு அமைக்க கோரி, மக்கள் கோரிக்கை விடுத்துள்ள பாலப் பகுதி, சாலை அமைக்கும் திட்ட அறிக்கையில் இல்லை. கள்ளபிரான்புரம் - நெய்குப்பி சாலை புதிதாக அமைக்கப்பட்டு, மாநில நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்படும். பின், நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிதியில் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை