போந்துாரில் சிறுபாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டுகோள்
சித்தாமூர் : சித்தாமூர் அடுத்த போந்துார் அம்பேத்கர் நகர் பகுதியில், சிறுபாலம் அமைக்கப்படாததால், மழைகாலத்தில் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கி, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர். ஆகையால், சாலை நடுவே சிறுபாலம் அமைக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்து வந்தனர்.அதன்படி, மத்திய அரசின் பி.எம்.ஏ.ஜி.ஒய்., 2022 - 23 திட்டத்தின் கீழ், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறுபாலம் அமைக்கும் பணி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. அடித்தளம் அமைக்க பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின், மூன்று மாதங்களாக கட்டுமானப் பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.