சிலாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை
மதுராந்தகம்: சிலாவட்டம் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுராந்தகம் ஒன்றியம், சிலாவட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், ஒழுப்பாக்கம் பகுதிகள், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ளன. மழைக்காலத்தில், அண்ணா நகரிலுள்ள மேட்டு நிலப்பரப்பிலிருந்து வரும் மழைநீர், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிச் செல்கிறது. இப்பகுதியில், மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பயணியர் நிழற்குடை உள்ள பகுதியில், மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. மழைநீர் தேங்குவதால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து, விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, மழைநீர் விரைந்து வெளியேறும் வகையில் வடிகால்வாய் அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.