உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சந்தையில் பயன்பாடில்லாத கை பம்ப் மினி டேங்க் அமைக்க கோரிக்கை

சந்தையில் பயன்பாடில்லாத கை பம்ப் மினி டேங்க் அமைக்க கோரிக்கை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் வார சந்தை வளாகத்தில் பயன்பாடின்றி உள்ள கை 'பம்ப்'பை அகற்றி, குடிநீர் வசதிக்காக,'மினி டேங்க்' அமைக்க வேண்டுமென, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.இக்கோவிலுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் உள்ளது.இந்த காலி இடத்தில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடக்கிறது.அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் நிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றை இந்த சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.வெளியூர் பகுதி வியாபாரிகளும், இங்கு காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்த சந்தையில் நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், சிறிய அளவிலான கடைகளுக்கு 25 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சந்தை வளாகத்தில் ஞாயிறுதோறும் 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடுகின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன், இங்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, குடிநீர் கை பம்ப் ஏற்படுத்தப்பட்டது.தற்போது, இந்த கை பம்ப் பயன்பாடு இல்லாமல், காட்சிப்பொருளாக உள்ளது.எனவே, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், இந்த கை பம்ப்பை அகற்றி, மின் இணைப்பு ஏற்படுத்தி, குடிநீர் மினி டேங்க் வசதி ஏற்படுத்த வேண்டும் என, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை