சாலையில் உலர்த்தப்படும் நெல் நெற்குணப்பட்டில் விபத்து அபாயம்
பவுஞ்சூர்:நெற்குணப்பட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை, கூவத்துார் நெடுஞ்சாலையில் உலர்த்துவதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. பவுஞ்சூர் அடுத்த நெற்குணப்பட்டு பகுதியில் கூவத்துார் - மதுராந்தகம் செல்லும் 30 கி.மீ., துாரம் உடைய மாநில நெடுஞ்சாலை உள்ளது. காத்தான்கடை, நெடுமரம், தட்டாம்பட்டு, நெல்வாய்பாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மதுராந்தகம் மற்றும் கூவத்துார் செல்ல இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். தினமும் இருசக்கர வாகனம், கார், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இச் சாலையில் செல்கின்றன. நெற்குணப்பட்டு பகுதியில், 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டு வருகின்றனர். தற்போது நெல் அறுவடை துவங்கியுள்ள நிலையில், இப்பகுதியில் நெல்லை உலர்த்த நெற்களம் இல்லை. இதனால், அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள், கூவத்துார் - மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர். இதனால், சாலையில் இடம் குறுகி, வாகன ஓட்டிகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நெல் மீது வாகனங்கள் செல்லாமல் இருக்க, சாலை நடுவே பாறைகளை வைத்துள்ளதால், வாகனங்கள் பாறையின் மீது மோதி விபத்துக்குள்ளாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையில் நெல்லை உலர்த்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், இப்பகுதி விவசாயிகளுக்கு நெற்களம் வசதி ஏற்படுத்த நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.