உங்களுடன் ஸ்டாலின் முகாம் 325 மனுக்கள் ஏற்பு
செங்கல்பட்டு:மலையடி வேண்பாக்கத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 325 மனுக்களை அப்பகுதி மக்கள் நேற்று அளித்தனர். செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், தனியார் திருமண மண்டபத்தில், வனக்குழு தலைவர் திருமலை தலைமையில், நேற்று நடந்தது. இதில், செங்கல்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தனலட்சுமி, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கள் பாஸ்கரன், மீனாட்சி, ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை ஆகியோர் பங்கேற்று, கர்ப்பிணியருக்கு, ஊட்டச் சத்து பெட்டகங்கள் வழங்கினர். இந்த முகாமில் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, தனிநபர் கழிப்பறை, மழைநீர் கால்வாய், பூங்கா, சமுதாயக்கூடம், குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 325 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.