உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திம்மாவரத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால் அவதி

திம்மாவரத்தில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால் அவதி

மறைமலை நகர்:திம்மாவரத்தில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து தேங்குவதால், அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திம்மாவரம் ஊராட்சியில் உள்ள அன்னை தெரேசா நகரில், 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதி தாழ்வான பகுதியாக உள்ளதால், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், கழிவுநீருடன் மழைநீர் கலந்து தெருக்கள் மற்றும் காலி மனைகளில் தேங்குகிறது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத் தொல்லையும் அதிகரித்து சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது‍: அன்னை தெரேசா நகர் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், மேலும் புதிதாக இப்பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. பலர் இப்பகுதியில் மனைவாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பகுதியில் உள்ள காலி மனை மற்றும் தெருக்களில் தண்ணீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், சிரமமாக உள்ளது. பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளதால், அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. சிலர் தெருக்களை ஆக்கிரமித்துள்ளதால், மழைநீர் வெளியே செல்ல முறையாக மழைநீர் வடிகால்வாய் அமைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்றவும், முறையாக மழைநீரை வெளியேற்றவும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை