உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஊனமாஞ்சேரியில் ஓ.எஸ்.ஆர்., இடம் ஆக்கிரமிப்பு மீட்டெடுத்து பூங்கா அமைக்க வலியுறுத்தல்

ஊனமாஞ்சேரியில் ஓ.எஸ்.ஆர்., இடம் ஆக்கிரமிப்பு மீட்டெடுத்து பூங்கா அமைக்க வலியுறுத்தல்

ஊனமாஞ்சேரி:ஊனமாஞ்சேரியில், பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி பொது இடங்கள், முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன.அவற்றை மீட்டு, பகுதிவாசிகள் பயன்பாட்டிற்கு பூங்கா அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரி ஊராட்சியில், ஒன்பது வார்டுகளில், 120 தெருக்களில், 6,000க்கும் அதிகமான நபர்கள் வசிக்கின்றனர்.கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மற்றும் வண்டலுார் -- கேளம்பாக்கம் பிரதான சாலை அருகில் அமைந்துள்ளதாலும் ஏரி, குளங்களால் சூழப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வளமாக உள்ளது.இங்கு புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி குடியிருப்போர் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது.இந்நிலையில் பெண்கள், குழந்தைகள் பொழுதுபோக்கவும், பகுதிவாசிகள் நடைபயிற்சி செய்யவும், இங்கு பூங்கா வசதி இல்லை. பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட ஓ.எஸ்.ஆர்., நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை மீட்டு, பூங்கா அமைக்க வேண்டும் என, புகார்கள் வந்துள்ளன.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இங்கு, கடந்த 1980 -- 90 வரை, புதிய வீட்டு மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில் வசந்தபுரம் மற்றும் வசந்தபுரம் விரிவு - 1, சந்திராபுரம் 1, 2, 3, 4, சக்கரவர்த்தி நகர் -1 உட்பட, பல மனைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டன.இந்த மனைப் பிரிவுகளில் பூங்கா அமைக்க, ஓ.எஸ்.ஆர்., எனும் திறந்தவெளி நிலங்கள் அரசுக்கு ஒதுக்கப்பட்டன. அதன்படி, ஒட்டுமொத்தமாக 4.5 ஏக்கர் பரப்பு நிலம், ஓ.எஸ்.ஆர்., வாயிலாக கிடைத்தது.இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன், ஓ.எஸ்.ஆர்., நிலம் அருகே மனை வாங்கி வீடு கட்டியவர்கள், அந்த நிலத்தை மெல்ல மெல்ல தங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, ஒரு கட்டத்தில் பட்டாவும் வாங்கிவிட்டனர்.பகுதிவாசிகள் தொடர் கோரிக்கையால், இப்போது பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் முன்னெடுப்பு பணிகளை துவக்கி உள்ளது.இந்நிலையில், ஓ.எஸ்.ஆர்., நிலங்களை ஆக்கிரமித்துள்ள நபர்கள், அவை தங்கள் இடம் எனக் கூறி, இடத்தை தர மறுக்கின்றனர்.எனவே, ஊனமாஞ்சேரியில் உள்ள ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் எவை என்ற விபரத்தை, மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தவிர, ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கு வழங்கப்பட்ட தனிநபர் பட்டாக்களை ரத்து செய்து, ஊராட்சி நிர்வாகத்திடம் நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூலப்பத்திரம் அவசியம்

ஓ.எஸ்.ஆர்., இடங்கள் எவை என்பதைக் கண்டறிய, வீட்டு மனை பிரிவுகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களின் மூலப் பத்திரம் தேவை. இது ஊராட்சி வசம் இல்லை. மாவட்ட நிர்வாகம் வசம் உள்ளது.இதனால், ஊராட்சி சார்பில் நிலங்களை கண்டறிவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே, மூலப்பத்திரங்களை வைத்து, ஓ.எஸ்.ஆர்., இடங்களை கண்டறிய, மாவட்ட நிர்வாகத்தால் மட்டுமே முடியும். மாவட்ட நிர்வாகத்தினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை