ஆப்பூரில் குவித்து எரிக்கப்படும் குப்பையால் கிராமத்தினர் அவதி
மறைமலை நகர்:ஆப்பூரில் குப்பை குவிக்கப்பட்டு எரிக்கப்படுவதால், கிராமத்தினர் அவதிப்படுகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், -காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஆப்பூர் ஊராட்சியில் ஆப்பூர், சேந்தமங்கலம், தாளிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில், 1,200க்கும் அதிகமாக வீடுகள் உள்ளன.இங்கு, சிங்கபெருமாள்கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி இருந்த அரசுக்கு சொந்தமான காலி நிலத்தில், கடந்த தி.மு.க., ஆட்சியில், 2010ம் ஆண்டு புதிதாக, ஆட்டோ நகர் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின், சாலை அமைப்பது உள்ளிட்ட ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்றன.கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் காரணமாக, தற்போது வரை இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல், இந்த காலி இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளன.கடந்த சில மாதங்களாக, ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை மற்றும் கழிவு பொருட்கள், இந்த பகுதியில் கொண்டு வந்து கொட்டப்பட்டு, தீயிட்டு எரிக்கப்படுகிறன. இதனால் ஆப்பூர், சேந்தமங்கலம், வளையக்கரணை உள்ளிட்ட கிராமத்தினர் மற்றும் நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர்.எனவே குப்பை கொட்டுவதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துமீறல் தடுக்கப்படும்
ஆப்பூர் ஊராட்சி நிர்வாகம் கூறியதாவது: ஊருக்கு வெளியில் உள்ள இந்த பகுதியில், இரவு நேரங்களில் மர்ம நபர்கள், வாகனங்களில் குப்பையை கொண்டு வந்து கொட்டிவிட்டுச் செல்கின்றனர். இந்த அத்துமீறலை தடுக்க, குப்பை கொட்டப்படும் பகுதியைச் சுற்றி, வாகனங்கள் செல்ல முடியாதபடி,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட உள்ளது. அதன் பின், இங்கு குப்பை கொட்டப்படுவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.