செங்கை மாநகர் பேருந்துகள் திருக்கழுக்குன்றத்திற்கு நீட்டிக்கப்படுமா?
திருக்கழுக்குன்றம்:தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மாநகர் பேருந்துகளில் சிலவற்றை, திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்க, பயணியர் வலியுறுத்துகின்றனர்.திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுபுற பகுதியினர், அரசு, தனியார் வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, தினமும் ஏராளமானோர், செங்கல்பட்டு, மறைமலை நகர், தாம்பரம், சென்னை ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். கல்பாக்கத்திலிருந்து, தாம்பரத்திற்கு இயக்கப்படும், தடம் எண் 108, மாமல்லபுரத்திலிருந்து, செங்கல்பட்டிற்கு இயக்கப்படும், தடம் எண் 508 ஆகிய பேருந்துகளில், பிற இடம் சென்று திரும்புகின்றனர். சில தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன.காலையில், பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தே, கூட்ட நெரிசலுடன் செல்வதால், திருக்கழுக்குன்றம் பயணியர், அதில் ஏறவே முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். பெண்கள், முதியோர், குழந்தைகள் நீண்டநேரம் காத்திருந்து தவிக்கின்றனர். மாலை திரும்பும்போதும், அவ்வாறே அவதிப்படுகின்றனர்.தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, மாநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாநகர் பேருந்தின் இயக்க எல்லை, 50 கி.மீ., தொலைவிற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தும், இந்த பேருந்துகள், 30 கி.மீ., தொலைவிற்கே இயக்கப்படுகின்றன. செங்கல்பட்டிலிருந்து, திருக்கழுக்குன்றம் 14 கி.மீ., தொலைவே உள்ள நிலையில், மாநகர் பேருந்துகளில் சிலவற்றை, அவசிய நேரத்தில், திருக்கழுக்குன்றம் வரை நீட்டிக்க, இப்பகுதி பயணியர் வலியுறுத்துகின்றனர்.