சரக்கு ரயில் மோதி பொத்தேரியில் பெண் பலி
மறைமலை நகர்: பொத்தேரி ரயில் நிலையம் அருகே, ரயில் தண்ட வாளத்தைக் கடக்க முயன்ற பெண், சரக்கு ரயில் மோதி உயிரிழந்தார். சென்னை, சைதாப் பேட்டையைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்பவரது மனைவி பாரதி, 40. இவர், சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில், மேலாளராக வேலை பார்த்து வந்தார். பாரதி நேற்று மாலை 4:30 மணியளவில், பொத்தேரியில் உள்ள தன் தோழியை பார்க்க, செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயிலில் வந்தார். பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி, மொபைல்போனில் பேசிக் கொண்டே, தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற சரக்கு ரயில் பாரதி மீது மோதியதில், அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.