சென்னை, சென்னை மாநகராட்சிக்கு, 22.44 கோடி ரூபாய் சொத்துவரி நிலுவை வைத்துள்ள, 100 பேரின் பட்டியலை, மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயில், சொத்து மற்றும் தொழில் வரி முதன்மையானது. ஆண்டுக்கு, 13 லட்சம் சொத்து உரிமையாளர்களிடமிருந்து, 1,800 கோடி ரூபாய்க்கு மேல், வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.அதேநேரம், நீண்ட காலமாக மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள், தனியாரிடம் சொத்துவரி வசூலிக்க, பல்வேறு வகையில் மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு, மே 31ம் தேதி வரை, சொத்துவரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள, 100 பேர் குறித்த பட்டியலை, https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில் மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.அவர்கள், 22.44 கோடி ரூபாய் மாநகராட்சி சொத்துவரி செலுத்தாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சியில், இந்த அரையாண்டில், 487 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாதவர்கள் குறித்த விபரங்கள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல், 'நோட்டீஸ்' வழங்குதல், ஜப்தி நடவடிக்கை போன்ற நடவடிக்கையின் வாயிலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.இந்த 100 பேர் விரைந்து சொத்துவரி செலுத்தாதபட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.