தாம்பரம், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் உருவாக்குவதற்கு முன், புறநகர் காவல் நிலையங்கள், சென்னை போலீஸ் கமிஷனரகத்தின் பரங்கிமலை காவல் மாவட்டத்தில் இருந்தன.அப்போது, ஒவ்வொரு காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட மக்கள் அதிகம் கூடும் இடம், பேருந்து நிலையம், ரயில் நிலைய நுழைவாயில், முக்கிய சந்திப்பு மற்றும் சாலைகளில், தனியார் பங்களிப்பு 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனால், குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிய முடிந்தது.இந்நிலையில், தாம்பரம் போலீஸ் கமிஷனரகம் தனியாக உருவாக்கப்பட்டதும், புறநகர் காவல் நிலையங்கள், அதனுடன் இணைக்கப்பட்டன. ஆனால், அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், 80 சதவீத கேமராக்கள் பழுதடைந்தன.இவற்றை சீரமைக்காமல் விட்டதால், ரவுடியிசம், கொலை சம்பவங்கள், கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை போன்ற குற்றங்கள் நடந்து வருகின்றன. இதில் ஈடுபடுவோரை கண்டறிய முடியாமல், காவல் துறையினர் தடுமாறுகின்றனர். இதனால், புறநகர்காவல் நிலையங்களில் செயல்படாமல் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைத்து, அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.