மின் கம்பியில் உரசியதாக கூறி மரம் அடியோடு வெட்டி சாய்ப்பு சேலையூரில் மர்ம நபர்கள் அட்டூழியம்
சேலையூர்சேலையூரை அடுத்த சந்தோஷபுரம், கலைஞர் கருணாநிதி சாலை, 7வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் லியோ இக்னடிஸ்.இவரது வீட்டு வளாகத்தில், 15 ஆண்டுகளான மா மரம் இருந்தது. இம்மரத்தின் கிளை, அத்தெரு வழியாக செல்லும் மின் வடத்தின் மீது உரசியபடி இருந்தது.இந்நிலையில், கடந்த 22ம் தேதி, மின் வடத்தின் மீது உரசும் மரத்தின் கிளையை வெட்ட, லியோ இக்னடிஸ் வீட்டிற்கு மூன்று பேர் வந்தனர்.அப்போது, லியோ இக்னடிஸ் குடும்பத்தினர், வடத்தின் மீது உரசும் கிளையை மட்டும் வெட்டுமாறு கூறியுள்ளனர்.அவர்களும் முதலில் கிளையை வெட்டியுள்ளனர். சிறிது நேரம் கழித்து, வீட்டிற்குள் சென்று, அந்த மரத்தை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். சத்தம் கேட்டு லியோ குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்த போது, மா மரம் அடியோடு வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.மரத்தை வெட்டிய ஊழியர்களிடம், அனுமதி இல்லாமல் மரத்தை அடியோடு ஏன் வெட்டினீர்கள் என, கேள்வி எழுப்பினர்.ஆனால், அதற்கு பதில் கூறாத ஊழியர்கள், மரத்தை துண்டு துண்டாக வெட்டி, வாகனத்தில் எடுத்து சென்றனர்.இதுகுறித்து, கவுரிவாக்கம் மின் வாரிய உதவி பொறியாளரிடம் கேட்டபோது, 'நாங்கள் மரத்தை வெட்டவில்லை.மரத்தை வெட்டப் போகிறோம் என, மின் வினியோகத்தை நிறுத்த சொன்னதால், நிறுத்தினோம். ஊராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டியிருக்கலாம்,” என்றார்.பரங்கிமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, 'ஊராட்சி பணியாளர்களிடம் விசாரித்ததில், அப்படி எந்த மரமும் வெட்டப்படவில்லை என்கின்றனர். இருப்பினும், இது தொடர்பாக விசாரிக்குமாறு கூறியுள்ளேன்,” என்றார்.