சென்னை, சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணி, ஓ.எம்.ஆரில், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் முதல் சிறுசேரி வரை, 20 கி.மீ., துாரம் நடக்கிறது. இதில், சோழிங்கநல்லுார் வரை ஒரு நிறுவனமும், நேரு நகரில் இருந்து சிறுசேரி வரை மற்றொரு நிறுவனமும் பணி மேற்கொள்கிறது.மெட்ரோ ரயில் பாதையில், 90 அடி இடைவெளியில் ஒரு துாண் என அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு துாணும் 45 அடி உயரம் உடையது.இப்பணி முடிந்த இடங்களில், தடுப்பை அகற்றி சாலை முழுதும் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால், பழைய சாலையை சுரண்டி எடுத்தபின் சீரமைக்காமல், பழைய சாலை மீது தார் கலவை கொட்டி புதுப்பிக்கப்படுகிறது.பழைய சாலையை குறிப்பிட்ட அளவு சுரண்டி எடுத்த பின் தான் புதுப்பிக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை கண்டுகொள்ளாமல், நடந்து வரும் இப்பணியால், புதுப்பிக்கப்பட்ட சாலை, ஓரிரு மாதத்தில் பெயரும் நிலை ஏற்படும்.தவிர, ஒவ்வொரு பருவமழைக்கும், இந்த சாலையில் வெள்ளம் தேங்கும். அதனால், இவ்வாறு போடப்படும் சாலையால் பயனில்லை என, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.சாலை மேம்பாட்டு நிறுவனம் கட்டுப்பாட்டில் ஓ.எம்.ஆர்., உள்ளது. பணிக்காக, மெட்ரோ ரயில் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. திருப்பி ஒப்படைக்கும் வரை, மெட்ரோ ரயில் நிர்வாகம் தான் சாலையை முறையாக பராமரிக்க வேண்டும்.பணி முடிந்த பகுதிகளில் சாலை புதுப்பிக்கும்போது, பழைய சாலையை சுரண்டி எடுத்த பின், புதுப்பிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.