மணலி, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மந்தமாக நடந்து வருவதால், பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மணலி மண்டலம், 21வது வார்டில் உள்ள பாடசாலை தெருவில் துவக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, பேருந்து நிலையம், சுகாதார நிலையம், மார்க்கெட் என, மக்கள் கூடும் இடங்கள் அதிகம் உள்ளது. இந்நிலையில், பாடசாலை தெருவின், 1 கி.மீ., சாலை, 4 கோடி ரூபாய் செலவில் கான்கிரீட் சாலையாக அமைக்கும் பணி, நான்கு மாதங்களுக்கு முன் துவங்கியது. இப்பணி காரணமாக பேருந்து நிலையம், பாடசாலை தெருவில் இருந்து காமராஜர் சாலை, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் எதிரே உள்ள காலி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, சேறும் - சகதியுமாக இருப்பதால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.பழைய பேருந்து நிலையத்திற்கும், புதிய பேருந்து நிலையத்திற்கும், 2 கி.மீ., துாரம் உள்ளது. பயணியர், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை பயன்படுத்த வேண்டியுள்ளது. சிலர், நடந்தே செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க, கான்கிரீட் சாலை அமைக்கும் பணியால், ஒரு பக்க சாலை பெயர்த்து எடுக்கப்படுகிறது. இதனால், ஒருபக்கம் மட்டுமே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பாடசாலை தெருவில் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.எனவே, சம்பந்தப்ட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.