சென்னை, ரயில்வேயில், கட்டணம் உயர்வு இன்றி, மாற்று வழிகளில் வருவாய் பெருக்க பார்சல் ரயில்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவது, விளம்பரங்கள் செய்வது, நடுத்தரமான ரயில் நிலையங்களில் பார்சல் மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில், ராயபுரத்தில் இருந்து அசாம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு, ரயில்களில் பார்சல் சேவைகள் செய்யப்படுகின்றன. ஆடைகள், மோட்டார் உதிரி பொருட்கள், ஸ்டீல் பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் கையாளப்படுகின்றன. ஆனால், சரக்குகளை கையாளும் நடைமேடை பகுதிகளில் போதிய அளவில் கூரையோ அல்லது ஷெட் வசதியோ இல்லை.இதனால், மழைக்காலங்களில் பொருட்கள் நனைந்து சேதமடையும் அவலநிலை உள்ளது.இதுகுறித்து, சிறு, குறு தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:ராயபுரம் ரயில் நிலையத்தில் சரக்குகள் கையாளும் வசதி, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வெளிமாநிலங்களில் பொருட்களைக் கொண்டு வந்து, வியாபாரிகள் இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். இதனால், ரயில்வேக்கும் வருமானம் கிடைக்கிறது.அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மழைக்காலத்தில் பொருட்கள் சேதமடைவதைத் தடுக்க தேவையான அளவுக்கு ஷெட்கள் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், ''சரக்கு கையாளும் இடத்தில், ஷெட் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான, ஒப்புதலைப் பெற்று பணிகளை விரைவில் துவங்குவோம்,'' என்றனர்.