2 டன் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
அம்பத்துார்:திருவொற்றியூர், கார்கில் வெற்றி நகர் ஜவான் பழனி தெருவில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை வடக்கு அலகு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில், செல்வம், 54, என்பவர், அவரது வீட்டில், 2,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.திருவொற்றியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து, குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, இட்லி, தோசை மாவு விற்கும் கடைகளுக்கு, அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது.இதையடுத்து, செல்வத்தை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.