நங்கநல்லுார், முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு, 'மக்கள் முதல்வரின் மனிதநேய விழா' எனும் பெயரில், 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நங்கநல்லுாரில், நேற்று முன்தினம் நடந்தது.ஆலந்துார் மண்டலக்குழு தலைவரும், ஆலந்துார் தெற்கு பகுதி தி.மு.க., செயலருமான சந்திரன் ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.அவர் பேசியதாவது:நங்கநல்லார் மெட்ரோ ரயில் நிலையம் அருகே, 'ஹஜ் இல்லம்' அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதை, நங்கநல்லுாரில் அமைப்பதாக தவறாக புரிந்துக் கொண்டனர்.அடுத்த இரண்டு மாதங்களில், விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கும். வரும், 2027ல் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் பயன்பாட்டிற்கு வரும். அதேபோல், வேளச்சேரி - பரங்கிமலை ரயில்வே மேம்பால திட்டம், அடுத்த இரண்டு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பேசுகையில், ''கொடி, கட்சி, தலைவர் வேறு என்றாலும், தமிழகத்திற்கு ஒரு பிரச்னை என்றால் அனைத்து கட்சியும் ஒன்றிணைவோம். கோடம்பாக்கம் சிவலிங்கம், மொழிக்காக உயிர் நீத்தார். அந்த தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.இவ்விழாவில், தி.மு.க., கழக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, வார்டு கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.