பின் சக்கரம் சுழலாத இ - பைக் வாங்கிய தொகை வழங்க உத்தரவு
சென்னை, நங்கநல்லுாரைச் சேர்ந்த கல்யாண ராம சர்மா கிருஷ்ணமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு:கிண்டியில் 'சென்னை இ - பைக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 2021 ஜூன் 30ம் தேதி 54,999 ரூபாய் செலுத்தி 'எட்ரான்ஸ்' மாடல் மஞ்சள் கலர் எலக்ட்ரிக் பைக் வாங்கினேன். வாகனம் ஓட்டி வந்தபோதே, திடீரென பின் சக்கரம் சுழலவில்லை. 'டெம்போ' உதவியுடன் பழுது பார்க்க அனுப்பி வைத்தேன். 75 நாட்களாகியும் ஒப்படைக்கவில்லை. மன உளைச்சல் ஏற்படுத்திய நிறுவனம், 50,000 ரூபாய் இழப்பீடு தர வேண்டும். வாகனத்துக்கு செலுத்திய தொகையையும் திருப்பி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ்.நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:உத்தரவாத காலத்தில் தான் வாகனம் பழுதாகிஉள்ளது. சரியான நேரத்தில் வாகனத்தை சரிசெய்து வழங்காமல், சம்பந்தப்பட்ட நிறுவனம் அலட்சியமாக செயல்பட்டது தெளிவாகிறது.எனவே, மனுதாரருக்கு வாகன தொகை 54,999 ரூபாயுடன் சேவை குறைபாடுக்கு 5,000 ரூபாயை, நிறுவனம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியை செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.