பஸ் நிலையம் எதிரே டாஸ்மாக் ரகளையால் பயணியர் அச்சம்
எண்ணுார், எண்ணுார், கத்திவாக்கம் பஜார் அருகே, மாநகர பேருந்து நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து, எழும்பூர், கோயம்பேடு, பிராட்வே உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில், தினமும், 53 பேருந்து சேவைகள் வழங்கப்படுகின்றன.இந்த நிலையில், அதை இடித்து புது பேருந்து நிலையம் கட்டும் பணி நடக்கிறது. அதன் காரணமாக, அருகே உள்ள பணிமனையில் இருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.எனவே, பயணியர் வெளியே நின்று தான் பேருந்து சேவைகளை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. இப்பேருந்து நிலையம் எதிரே, 'டாஸ்மாக்' மதுக்கடை ஒன்று செயல்படுகிறது. இங்குள்ள மதுக்கூடத்தை 'குடி'மகன்கள் பயன்படுத்தாமல், வெளியே சென்று மது அருந்துகின்றனர்.குறிப்பாக, பேருந்து நிலையம் அருகே மற்றும் தனியார் நிறுவனம் ஒட்டியுள்ள சந்து உள்ளிட்ட இடங்களில் கூடும் 'குடி'மகன்களால், அடிக்கடி தகராறுகள் ஏற்படுகின்றன.இதன் காரணமாக, சாலையில் பேருந்து சேவைக்காக காத்திருக்கும் பயணியர், அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, போலீசார் கவனித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல, பேருந்து நிலையம் எதிரே பயணிருக்கு இடையூறாக இருக்கும், 'டாஸ்மாக்' கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.