சிறுமியிடம் அத்துமீறிய எலக்ட்ரீஷியனுக்கு போக்சோ
அயனாவரம், கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயது பெண், நேற்று முன்தினம் மாலை, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் விபரம்:நானும், என் கணவரும் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற நிலையில், 10ம் வகுப்பு பயிலும் எங்களது 15 வயது மகளை, பக்கத்து வீட்டில் வசிக்கும் எலக்ட்ரீஷியன் சசிகுமார், 42, என்பவர், உதவி கேட்பது போல் அழைத்துள்ளார்.வெளிவே வந்த சிறுமியை, வலுக்கட்டாயமாக அவரது வீட்டிற்குள் இழுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.அவரை தள்ளி விட்டு வெளியே ஓடி வந்த சிறுமி, அருகில் வசிக்கும் பாட்டியிடம் தஞ்சமடைந்து, எங்களுக்கு தகவல் கூறினார். சசிகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையில், சம்பவத்தில் ஈடுபட்ட சசிகுமார் தப்பியோடும் போது, முதல் மாடியில் இருந்து தவறி விழுந்ததில், இடதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அயனாவரம் போலீசார் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின், அவரை,'போக்சோ'வில் கைது செய்து விசாரிக்கின்றனர்.