| ADDED : ஜூன் 07, 2024 12:34 AM
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 471 பிரதான சாலைகள் உட்பட, ஆயிரக்கணக்கான சாலைகள் உள்ளன.இவற்றில் பல சாலைகளில் தற்போது, மெட்ரோ ரயில் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், ராயப்பேட்டை நெடுஞ்சாலை உள்ளிட்ட பல பகுதிகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.இதுபோன்று மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைகள், உபயோகமின்றி வீணாகி வருகின்றன. எனவே, அவற்றை பயனுள்ள இடங்களில் மாற்றி அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.குறிப்பாக, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள அஜந்தா பேருந்து நிறுத்த நிழற்குடை, உபயோகமின்றி வீணாகி வருகிறது.அதை, தேவையான வேறொரு இடத்திற்கு மாற்றி அமைத்தால், பயணியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், தனியார் நிறுவனம் சார்பிலும் பல இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களில் உள்ள நிழற்குடைகள் யாரால் வைக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.