பயிற்சியில் ஈடுபட்ட மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
வடக்கு கடற்கரை, 'ஏசி' மெக்கானிக் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் பாய்ந்து ஐ.டி.ஐ., மாணவர் உயிரிழந்தார்.பெரம்பூரைச் சேர்ந்தவர் ரமேஷ்; தனியார் நிறுவன ஊழியர். இவரது மகன் ராகவன், 16; புரசைவாக்கத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் 'ஏசி' மெக்கானிக் முதலாம் ஆண்டு படித்தார்.நேற்று முன்தினம் பிற்பகல் பயிற்சிக்காக மண்ணடி - மூர் தெருவில் உள்ள கடைக்கு, ராமன் என்பவருடன் சென்றார். அங்கு, 'ஏசி' மிஷின் பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக, ராகவன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், அவர் துாக்கி வீசப்பட்டார்.உடனடியாக, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவரின் பரிசோதனையில், அவர் இறந்தது தெரிய வந்தது. விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.சிறுவனை கவனக்குறைவாக பணியில் ஈடுபடுத்தியது தொடர்பாக, ஐ.டி.ஐ., நிர்வாகத்தினரான பிரபு, நாகூர் கனி மற்றும் ராமன் ஆகியோரிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், மண்ணடி பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.