3வது கட்டமாக அடுத்த மாதம் மேலும் 125 மின்சார பஸ்கள்
சென்னை, சென்னையில் மூன்றாவது கட்டமாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து, 125 மின்சார பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. சென்னை நகர கூட்டாண்மை திட்டத்தின் கீழ், நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் அடிப்படையில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 625 புதிய தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக, வியாசர்பாடி பணிமனையில் இருந்து, 120 மின்சார பேருந்துகளும், இரண்டாவது கட்டமாக, பெரும்பாக்கம் பணிமனையில் இருந்து, 135 மின்சார பேருந்துகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. மூன்றாவது கட்டமாக, 125 மின்சார பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, சென்னை மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில், பல்வேறு கட்டங்களாக மொத்தம் 625 மின்சார பேருந்துகள் இயக்க, 697 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையில், 255 மின்சார பேருந்துகள் பயன் பாட்டிற்கு வந்துள்ளன. அடுத்தகட்டமாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து, 125 மின்சார பேருந்துகள், அடுத்த மாதம் முதல் இயக்கப்படும். இதற்காக, அங்கு மின்சார பேருந்துகள் இயக்குவதற்கான கட்டமைப்பு, 25 சார்ஜிங் மையங்கள், பணிமனைகளில் விரிவாக்க பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இந்த பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தவுடன், பூந்தமல்லியில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் செல்லும் பழைய பேருந்துகள் நீக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.