விதிமீறிய 140 கட்டடங்களுக்கு சீல்
சென்னை : சென்னையில், விதிமறி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கும் நடைமுறையை மாநகராட்சி துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, 140 கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததால், மாநகராட்சி கமிஷனருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டதால், அபராத தொகை ரத்து செய்யப்பட்டதுடன், விரைந்து விதிமீறிய கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து, முதற்கட்டமாக, வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகர் முழுதும், 140 கட்டடங்கள் விதிமீறி கட்டப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த கட்டடங்களை மூடி 'சீல்' வைக்கும் பணியை, மாநகராட்சி துவங்கி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கட்டட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த தகவல் அடிப்படையில், அனுமதியற்ற முறையில் கூடுதல் தளங்கள் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளவையாக, 140 கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. வணிக பயன்பாட்டுடன் கூடிய இக்கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன், மற்ற குடியிருப்புகள் போன்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.