வண்டலுார்: தடை யை மீறி ஊனமாஞ்சேரி பெரிய ஏரி அடுத்துள்ள வனத்துறை, பொதுப்பணி துறைக்குச் சொந்தமான இடங்களில் இருந்த, 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. அவை எரிக்கப்பட்டு அடையாளம் மறைக்க முயற்சி நடந்தது, இயற்கை ஆர்வலர்களிடையே பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, ஊனமாஞ்சேரி ஊராட்சியில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 116 ஏக்கர் பரப்புள்ள பெ ரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு அப்பால், அரசுக்குச் சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள், வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகள், விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களில், 3,000க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில், 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள், தனி நபர்களின் ஆதாயத்திற்காக வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. தவிர, 50க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டு, தடயங்கள் மறைக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: ஊனமாஞ்சேரி பெரிய ஏரிக்கு அடுத்துள்ள 400 ஏக்கர் விவசாய நிலங்களில், 'ரியல் எஸ்டேட்' தொழிலுக்கு பயன்படுத்தும் நோக்கில், சில நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன. இந்த இடத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாததால், அடர்ந்த காட்டுக்குள் ஏரி மற்றும் வனப்பகுதியை ஆக்கிரமித்து மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு, சி.எஸ்.ஆர்., எனும், பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு திட்ட நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தபகுதியில்தான், அரசின் தடையையும் மீறி, 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன. தங்கள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வெட்டப்பட்டு இருக்கலாம். இதுகுறித்து, அரசு விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.