கூவம் ஆற்றில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவர் பலி
திருவேற்காடு: கூவம் ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவன், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், 38. இவரது மனைவி வினோதினி, 35. இவர்களுக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகன் அதர்வா, 14. இவர், திருவேற்காடு, சிவன் கோவில் தெருவில் உள்ள பாட்டி ஜெயபாரதி, 60, வீட்டில் தங்கி, ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், திருவேற்காடு, காமதேனு நகர் அருகே உள்ள கூவம் ஆற்றில், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்களுடன் நேற்று மதியம் குளிக்கச் சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அதர்வா, நீச்சல் தெரியாமல் கூவம் ஆற்றில் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு போலீசார், பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், அதர்வாவின் உடலை மீட்டு இறப்பிற்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.