88 வயது முன்னாள் ராணுவ வீரரை சாலையில் முட்டி துாக்கி வீசிய பசு சென்னையில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
அம்பத்துார்:அம்பத்துார் மண்டலம், 82வது வார்டு, பிரித்திவிபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 88; முன்னாள் ராணுவ வீரர். மகளுடன் வசித்து வருகிறார். இவர், தினமும் காலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம்.கடந்த 4ம் தேதி, காலை 6:50 மணிக்கு, வீட்டின் அருகே நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு, பகுதிவாசிகள் வைத்த உணவை சாப்பிட்டு கொண்டிருந்த பசு, திடீரென முனுசாமியை முட்டி துாக்கி வீசியது.இதில், தலைகுப்புற விழுந்த முனுசாமியின் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் முனுசாமியை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.சிகிச்சைக்கு பின், அன்று மாலை அவர் வீடு திரும்பினார். இந்த சம்பவத்தின் 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகள், சமூக வலைதளத்தில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இது குறித்து தகவலறிந்த அம்பத்துார் மண்டல நல அதிகாரி பிரியதர்ஷினி, சுகாதாரத்துறை அலுவலர் கேசவன் மற்றும் அதிகாரிகள், முனுசாமியின் வீட்டிற்கு சென்று, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.பின், முனுசாமியை முட்டிய பசு உட்பட அப்பகுதியில் சுற்றித் திரிந்த நான்கு மாடுகளை பிடித்து, மாநகராட்சிக்கு சொந்தமான தொழுவத்திற்கு கொண்டு சென்று அடைத்தனர்.
மாநகராட்சி அலட்சியம்
கடந்த மாதம் 14ம் தேதி கொரட்டூர், விவேகானந்தா நகர், பாலாஜி தெருவில் நடந்து சென்ற ஜெயலட்சுமி, 43, என்பவர், முட்ட வந்த பசுவிடம் இருந்து, தன் இரண்டரை வயது பேத்தியை காப்பாற்ற முயன்றார். அப்போது, ஜெயலட்சுமியை அந்த மாடு முட்டி துாக்கி வீசியது.இந்த சம்பவம் நடந்து மூன்றே வாரத்தில், மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரத்தில், மாநகராட்சி நிர்வாகம் இதுவரை திடமான ஒரு முடிவு எடுக்காதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முனுசாமியை முட்டிய மாட்டின் உரிமையாளரை தேடி வருகிறோம். அப்பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட பசுக்களின் உரிமையாளர்களுக்கு, பொது சுகாதார சட்டம் - 1939 பிரிவு 44ன் கீழ் 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், கால்நடைகளை சாலையில் திரிய விடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- சுகாதார அதிகாரி, அம்பத்துார் மண்டலம்.