மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சை அளிக்க அரசு முன்வர வேண்டுகோள்
அம்பத்துார்:அம்பத்துார், ஒரகடம், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில் குமரன், 40; லாரி ஓட்டுநர். இவரது மனைவி சத்யா, 37. மகள் சிம்யா, 14, மகன் ஸ்வாதீஸ்வரன், 12.ஸ்வாதீஸ்வரன் அருகே உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கிறார். கடந்த அக்., 20ம் தேதி மாலை, நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள தாங்கள் பூங்காவில் ஸ்வாதீஸ்வரன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, மின் கம்பி உரசியதில் ஸ்வாதீஸ்வரனின் உடலில் மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்தது.இதில், தலை, முகம், கழுத்து, மார்பு, தோள்பட்டை, இடுப்பு, வயிறு, கால், பின்பக்கம் உட்பட அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டன. அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு 40 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூன்று வாரங்களுக்கு முன், வலது காலில் இருந்து தசை எடுத்து இடுப்பு மற்றும் வயிறு பகுதியில் வைத்து 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த நவ., 30ல் ஸ்வாதீஸ்வரன் வீடு திரும்பியுள்ளார்.தலை, முகம், தோள்பட்டை, மார்பு உள்ளிட்ட பகுதிகளில், பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டி இருப்பதால், இடது காலில் இருந்து தசையை எடுக்க வேண்டும் எனவும், அதற்கு அதிகளவில் செலவாகும் எனவும் மருத்துவர்கள் கூறியதால், பெற்றோர் கலக்கத்தில் உள்ளனர்.உரிய சிகிச்சை அளிக்க முடியாததால், மகனின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது என, வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, ஸ்வாதீஸ்வரனுக்கான முழு சிகிச்சையும் அளிக்க, அரசு முன்வர வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.