தாம்பரம், பொங்கல் பண்டிகையின் போது, வண்டலுார் உயிரியல் பூங்காவிற்கு பார்வையாளர்கள் அதிகளவில் வருவர்.இந்தாண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வருவதால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவர் என, பூங்கா நிர்வாகம் எதிர்பார்க்கிறது.இதனால், கூட்டத்தை சமாளிக்க, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கூட்டம் கூடுவதை தடுக்க, 'க்யூ.ஆர்.,' குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள். டிக்கெட்டுகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து உள்ளே அனுப்ப ஏழு ஸ்கேனிங் இயந்திரங்கள், மெட்டல் டிடெக்டர், 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை, சிறுவர்கள் காணாமல் போன எளிதாக கண்டுபிடிக்கும் வகையில் கையில் ஸ்டிக்கர் ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.-தவிர, கூட்டத்தை சமாளிக்க, சென்னை, வேலுார், விழுப்புரம் சரகங்களில் இருந்து, 100 வனத்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.மேலும், 100 போலீசார், 150 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். பூங்காவினுள் சிகரெட் உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.