போதைப் பொருட்கள் விற்பனைக்கு பயன்படுவதால் கிரைண்டர் செயலிக்கு தடை? தமிழக அரசுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் கடிதம்
சென்னை :தன் பாலின ஈர்ப்பாளர்கள் பயன்படுத்தும், 'கிரைண்டர்' செயலி வாயிலாக, சென்னையில் போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது, போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அதனால், அச்செயலிக்கு, தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்து வருகிறது; இதனால் குற்றங்களும் அதிகரித்து வருவதால், தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியது. இதற்காக உருவாக்கப்பட்ட, போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், மாநிலம் முழுதும் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றனர்.போதைப் பொருள் விற்பனை கும்பலை கைது செய்யும் போலீசார், முக்கிய புள்ளிகளின் சொத்துக்களை முடக்கும் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இது, ஓரளவு கை கொடுத்தாலும், போதைப் பொருளை கட்டுப்படுத்த முடியவில்லை.சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்கள் வரை போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. கைதானோரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சமூக வலைதளங்கள் மற்றும் செயலிகள், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்துவதுதான், அதிகரிக்க முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.குறிப்பாக, தன்பாலின ஈர்ப்பாளர்கள் பயன்படுத்தும், 'கிரைண்டர்' செயலி வாயிலாக, மர்மக் கும்பல் பல்வேறு குழுக்களை உருவாக்கி, அதன் வாயிலாக, சென்னையில் போதை பொருள் விற்பது தெரிய வந்தள்ளது.கைது செய்யப்படும், 10ல் ஐந்து பேர், 'கிரைண்டர்' செயலி வாயிலாகவே, போதை பொருள் விற்பதாக, போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால், போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவது, போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், 'கிரைண்டர்' செயலிக்கு தடைகோரி, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில், 'கிரைண்டர் செயலியில் அதிகளவில் போதை பொருள் விற்பனை நடக்கிறது. அச்செயலியை தமிழகத்தில் தடை செய்தால், போதை பொருள் விற்பனையை தடுக்க வழிவகுக்கும்' என, கூறப்பட்டுள்ளது.அதேநேரம், சென்னை மட்டுமின்றி, தமிழகத்தை சேர்ந்த பலரும், இச்செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால், மாநிலம் முழுதும் கிரைண்டர் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என, பலதரப்பினரும் வலியுறுத்துகின்றனர். மாணவர்களும் பாதிப்பு
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தன் பாலினத்தவர்கள், இருபாலினத்தவர்கள், திருநங்கையர் மற்றும் வினோதமான மனநிலை உடையோர், 'டேட்டிங்' செய்வதற்காக, கிரைண்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியை கல்லுாரி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, அவர்களும் போதைக்கு அடிமையாவது தொடர்கிறது.குறிப்பாக, செயலியில் அறிமுகமாகும் நபர்களை தனிமையில் சந்திக்கும்போது, பணம், மொபைல், நகைகள் பறித்து, அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டும் சம்பவங்களும் தொடர்கிறது. வெளியே தெரிந்தால் அவமானம் என, பலர் போலீசில் புகார் கொடுக்கவே தயங்குகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.8 மாதத்தில் 2,900 பேர் கைதுபோதை பொருள் தொடர்பாக, கடந்த எட்டு மாதங்களில், 996 வழக்குகள் பதிவு செய்து, 2,900 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கஞ்சா வழக்கில், 1,921; மெத் ஆம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 449 பேர்; போதை மாத்திரை விற்ற வழக்கில் 319 பேர் கைதாகி உள்ளனர்.இவர்களில் 138 பேர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடமிருந்து, 1,122 கிலோ கஞ்சா; 48,684 போதை மாத்திரை; 21.09 கிலோ மெத் ஆம்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.- விஜயகுமார்,கிழக்கு மண்டல இணை கமிஷனர்,சென்னை
ஹெராயின் கடத்திய திரிபுரா வாலிபர்கள் கைது
தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., சாலையில், சந்தேகப்படும்படியாக நின்ற நபர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில், 2 கிராம் ஹெராயின் இருந்தது.தீவிர விசாரணையில், திரிபுரா மாநிலத்தை சேர்ந்த அனோர்ஹொசைன், 27, அஜய்குமார், 30, ரீமன்தெபர்மா, 18, முகமது ஜேசிம்யா, 23, தஜ்ருல் ஹுசைன், 22, என்பது தெரிந்தது.இவர்கள், சென்னையில் ஹோட்டல், கட்டுமான பணி செய்து கொண்டே, அடிக்கடி திரிபுரா சென்று ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வந்து, சென்னையில் விற்பனை செய்தது தெரிந்தது. ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ஹெராயினை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.