உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண் போலீசின் குடும்பத்திற்கு பேட்ச் தோழியர் உதவிகரம்

பெண் போலீசின் குடும்பத்திற்கு பேட்ச் தோழியர் உதவிகரம்

ஆவடி: அம்பத்துார் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த பெண் போலீசின் குடும்பத்திற்கு, பெண் போலீசார் 11.33 லட்சம் ரூபாய் திரட்டி வழங்கியது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருமுல்லைவாயில், சோழம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 52. இவரது மனைவி சுமதி, 48; தலைமை காவலர். கடந்த செப்., 11ம் தேதி, டி.வி.எஸ்., என்டார்க் ஸ்கூட்டரில் கணவருடன் சென்றபோது, கள்ளிக்குப்பம் அருகே லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், சுமதியின் குடும்பத்திற்கு உதவ, 2003ம் ஆண்டு, தமிழகம் முழுதும் காவல் பணியில் சேர்ந்த 1,354 பெண் தலைமை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, 'தோழிகள் - 2003 பேட்ச்' என்ற பெயரில் 'வாட்ஸாப்' குழு மூலம் 11.33 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனர். இதையடுத்து, திருமுல்லைவாயிலில் உள்ள தனியார் மண்டபத்தில், சுமதியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பங்கேற்று, சுமதியின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். பின், 'வாட்ஸாப்' குழு வாயிலாக வசூலித்த பணத்தில் 9 லட்சம் ரூபாயை, சுமதியின் பிள்ளைகள் பெயரில் 10 ஆண்டுக்கு 'கிசான் விகாஸ்' என்ற அஞ்சலக வைப்பு தொகையாக செலுத்தி, அதற்கான ஆவணங்கள் மற்றும் மீதமுள்ள தொகையை குடும்ப செலவிற்கு கொடுத்து ஆறுதல் கூறினர். அவர்களின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !