| ADDED : ஜன 14, 2024 12:16 AM
சென்னை, ''இந்தியாவில் துாய்மை இந்திய நகர பட்டியலில், சென்னை மாநகராட்சி 45.4 சதவீதம் மதிப்பெண் பெற்று முன்னேறி உள்ளது,'' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில், 2016ல் இருந்து ஆண்டுதோறும் நகரங்களில் துாய்மைக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு தரவரிசை வெளியிடப்படுகிறது.கடந்த 2022ம் ஆண்டில், 10 லட்சத்துக்கும் அதிகமான நகரங்களுக்கான பட்டியலில் சென்னை 44வது இடம் பிடித்தது. அதேநேரம், கடந்தாண்டு 10 லட்சத்துக்கு அதிகமான மக்கள் தொகை மதிப்பீடு கணக்கில் எடுக்கப்படவில்லை. மாறாக 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அந்த வகையில், 446 நகர உள்ளாட்சி அமைப்புகளில், சென்னை மாநகராட்சிக்கு 199வது இடம் கிடைத்துள்ளது. ஆனால், கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட 7,500 மதிப்பெண்களில், 2,866.14 என்ற 37.5 சதவீத மதிப்பெண்கள் தான் கிடைத்திருந்தது. தற்போது, 9,500 மதிப்பெண்களில் 4,317.79 என்ற 45.4 சதவீத மதிப்பெண்கள் பெற்று துாய்மை நகர தரவரிசையில் சென்னை முன்னேறி உள்ளது.மேலும், தமிழக நகர உள்ளாட்சி அமைப்புகள் பெற்ற சராசரி மதிப்பெண்களை விட, சென்னை மாநகராட்சி அதிகம் பெற்று முன்னேறி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.