உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 4 கி.மீ., கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி 12 ஆண்டாக இழுத்தடிக்கும் நிறுவனங்கள் வரும் பருவ மழைக்கும் மிதக்க காத்திருக்கும் வேளச்சேரி

4 கி.மீ., கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி 12 ஆண்டாக இழுத்தடிக்கும் நிறுவனங்கள் வரும் பருவ மழைக்கும் மிதக்க காத்திருக்கும் வேளச்சேரி

வேளச்சேரி, வேளச்சேரி பகுதியில் சேரும் கழிவுநீரை, நேரடியாக பெருங்குடி சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் வகையில், 2013ம் ஆண்டு, 4 கி.மீ., தொலைவு பதிக்க வேண்டிய குழாய் பணியை, 12 ஆண்டுகள் ஆகியும் முடிக்காததால், வரும் பருவமழைக்கும் கழிவுநீரால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அடையாறு மண்டலம், 172, 175, 176, 177 ஆகிய வார்டுகள், வேளச்சேரி பகுதியை உள்ளடக்கியது. இங்குள்ள கழிவுநீர், பெருங்குடி சுத்திகரிப்பு நிலையம் செல்கிறது. இதில், 172, 175 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், நேராக பெருங்குடி செல்கிறது. ஆனால், 176, 177 ஆகிய வார்டுகளில் சேரும் கழிவுநீர், எல்.ஐ.சி., காலனியில் உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் இருந்து, ஓ.எம்.ஆர்., எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உந்து நிலையம் வழியாக, 11 கி.மீ., பயணித்து பெருங்குடி செல்கிறது. மயிலாப்பூர், அடையாறு பகுதியில் இருந்து, 2,000 எம்.எம்., குழாய் வழியாக வரும் கழிவுநீர், எஸ்.ஆர்.பி., டூல்ஸ் உந்து நிலையம் சென்று, அங்கிருந்து பெருங்குடி செல்கிறது. இதனால், வேளச்சேரி பகுதி கழிவுநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதுடன், பிரச்னை அதிகரித்தது. இதனால், 2013ம் ஆண்டு, வேளச்சேரியில் இருந்து நேராக, 4 கி.மீ., தொலைவில் உள்ள பெருங்குடி செல்லும் வகையில், 1,000 எம்.எம்., குழாய் பதிக்கும் பணி துவங்கியது. இந்த பணியை, எஸ்.இ.டபிள்யூ., என்ற நிறுவனம் செய்தது. நிர்வாக குளறுபடியால், 2020ம் ஆண்டு அந்நிறுவனம் பணியை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறியது. மீதம் 600 மீட்டர் துாரம், ஆங்காங்கே இணைப்பு குழாய் பதிக்க வேண்டும். இந்த பணியை, 2021ம் ஆண்டு, வி.வி.வி., என்ற நிறுவனத்திற்கு வாரியம் வழங்கியது. மூன்று ஆண்டுகளில், 498 மீட்டர் துாரத்திற்கு குழாய் பதிக்கப்பட்டது. பழைய நிறுவனம் போல், இந்த நிறுவனமும் பணியை பாதியில் நிறுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் முடிய வேண்டிய பணி, 12 ஆண்டுகள் ஆகியும் முடிக்கப்படாததால், வேளச்சேரியில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, வேளச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: ஒவ்வொரு மழைக்கும், தரைத்தளம் மூழ்கி பெரும் பாதிப்பை சந்திக்கிறோம். இதில் கழிவுநீரும் சேர்வதால், நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இரண்டு நிறுவனங்கள் பணி செய்தும், 12 ஆண்டுகளாக, 4 கி.மீ., தொலைவுக்கு குழாய் பதிக்க முடியவில்லை. தற்போது முடிக்க வேண்டிய, 102 மீட்டர் குழாயை பதித்தால் தான், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வரும் பருவமழைக்கு கழிவுநீரால் பிரச்னை இருக்காது என நினைத்தோம். ஏமாற்றம் தான் மிஞ்சியது. எம்.எல்.ஏ., - எம்.பி., கவுன்சிலர்களிடம் கூறியும், எந்த பயனும் இல்லை. வரும் மழைக்கும், கழிவுநீரில் தான் மிதக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பலமுறை வலியுறுத்தியும், ஒப்பந்த நிறுவனம் அசைந்து கொடுக்கவில்லை. அலட்சியமாக செயல்படுகிறது. மக்கள் உணர்வுக்கு மதிப்பளிப்பது இல்லை. எங்கள் பேச்சை மதிப்பதும் இல்லை. மயிலாப்பூரில் இதேபோல் பணி எடுத்து, பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது, அங்கு பணியை முடித்துவிட்டனர். வேளச்சேரி பணியை கிடப்பில் போட்டுள்ளனர். இந்த மழைக்கும் கழிவுநீர் பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. - குடிநீர் வாரிய அதிகாரிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை