மாநகராட்சி தொடக்க பள்ளி நடுநிலையாக தரம் உயர்வு
வேளச்சேரி:அடையாறு மண்டலம், 175வது வார்டு, வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள, 35 சென்ட் இடத்தில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு, 360 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை வைத்தனர். போதிய வகுப்பறை இல்லாததால், தரம் உயர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே ஐந்து வகுப்பறைகள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஒரு கோடி ரூபாயில், நான்கு வகுப்பறைகள் கட்டப்பட்டன. இதனால், இந்த பள்ளியை, நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். வரும் கல்வியாண்டு முதல், நடுநிலை பள்ளியாக தரம் உயர்வதுடன், ஒரு கோடி ரூபாயில், கூடுதலாக நான்கு வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.