உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 5,600 இடங்களில் உள்ள மாநகராட்சி சொத்துக்கள்... அளவீடு! : ஆக்கிரமிப்பு அகற்றி இணையத்தில் பதிவேற்ற முடிவு

5,600 இடங்களில் உள்ள மாநகராட்சி சொத்துக்கள்... அளவீடு! : ஆக்கிரமிப்பு அகற்றி இணையத்தில் பதிவேற்ற முடிவு

'சென்னையில் 5,600 இடங்களில் மாநகராட்சி சொத்துகள் உள்ளன. இந்த சொத்து விபரங்களை, மாநகராட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய, ஆவணங்கள் அடிப்படையில் அளக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், புது திட்டங்களுக்கு தேவையான இடங்கள், எளிதில் அடையாளம் காணப்படுவதுடன், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக மீட்க முடியும்' என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சி, 174 சதுர கி.மீ., பரப்பில், 155 வார்டுகளுடன் 10 மண்டலங்களாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை சேர்க்கும் வகையில், புறநகரில் உள்ள ஒன்பது நகராட்சிகள், எட்டு பேரூராட்சிகள் மற்றும் 25 ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, 424 சதுர கி.மீ., பரப்பில், 2011ம் ஆண்டு மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது.இதன்படி, 200 வார்டுகள், 15 மண்டலங்கள் கொண்ட மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், விரிவாக்க பகுதிகளில் உள்ள வருவாய்த்துறை எல்லைகள், சென்னை மாவட்டத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகள், சென்னை மாவட்டத்தில் சேர்க்கப்பட்டது.சென்னை மாநகராட்சி எல்லையில், மக்கள் தொகை அதிகரிப்பு, துரித சேவை, நிர்வாக வசதி போன்ற காரணங்களால், 22 சட்டசபை தொகுதிகளை அடிப்படையாக வைத்து, மண்டலங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன.அதேபோல், புறநகரில் உள்ள சில ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் சேர்க்கும் திட்டமும் உள்ளது. சென்னை அபார வளர்ச்சி அடைந்து வருவதால், அதற்கு ஏற்ப கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டி உள்ளது. ஆட்சி மாறி வரும்போது, புதிதாக பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்படும். கடந்த 10 ஆண்டுகளில், வார்டு வாரியாக 'அம்மா' உணவகம், அம்மா குடிநீர், சுகாதார நிலையம் உள்ளிட்டவை துவக்கப்பட்டு உள்ளன. இதற்கு போதிய இடம் கிடைக்காததால், நீர்நிலைகளில் துவங்கிய சம்பவங்களும் நடந்தன.தற்போதைய நிலவரப்படி, சென்னை மாநகராட்சியில் 387 கி.மீ., துாரம் பேருந்து சாலைகள், 5,270 கி.மீ., துாரத்தில், 43,630 உட்புற சாலைகள் உள்ளன. கட்டடங்களாக பார்த்தால், ரிப்பன் மாளிகை, 15 மண்டல அலுவலகங்கள், மூன்று வட்டார துணை கமிஷனர் அலுவலகங்கள், 200 வார்டு அலுவலகங்கள், பூங்காக்கள், மைதானங்கள், அங்கன்வாடிகள், பள்ளிகள் உள்ளிட்ட, 5,600 இடங்களில் மாநகராட்சி சொத்துகள் உள்ளன.இந்த சொத்துகளை அளந்து பாதுகாக்கவும், மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால், திட்டங்களுக்கு தேவையான இடங்களை எளிதில் அடையாளம் காண்பதுடன், ஆக்கிரமிப்புகளை அதிரடியாக மீட்க முடியும் என, அதிகாரிகள் கூறினர்.கூடுதல் அதிகாரிகள்சென்னை மாநகராட்சியில் உள்ள சொத்துக்களை பாதுகாக்க, மூன்று சப் - கலெக்டர், ஒரு வருவாய் அதிகாரி, நான்கு தாசில்தார்கள் மற்றும் 17 சர்வேயர்கள் உள்ளனர். ஆக்கிரமிப்பை மீட்பது, இதர துறைகளுக்கு மாநகராட்சி இடத்தை வழங்குவது, மாற்று இடத்தை அங்கிருந்து பெறுவது, இது தொடர்பான ஆவணங்கள் தயார் செய்வது, ஒப்புதல் பெறுவது போன்ற பணிகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி சொத்து விபரங்களை, மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவு செய்துள்ளதால், துல்லியமாக அளந்து விபரம் சேகரிக்க உள்ளனர். இதற்கு, கூடுதலாக வருவாய்த்துறை அதிகாரிகளை பணியமர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி இடங்கள் எண்ணிக்கைநகர்ப்புற சுகாதார நிலையம் 140சமுதாய நல மையங்கள் 16மகப்பேறு மருத்துவமனைகள் 3தொற்றுநோய் மருத்துவமனை 1பூங்கா 871விளையாட்டு மைதானம் 210மயானம் 192அம்மா உணவகம் 388அங்கன்வாடி மையம் 1,806மாநகராட்சி பள்ளிகள் 281

ஆக்கிரமிப்பாளர்களுக்கு சிக்கல்

ஒரு லட்சம் சதுர அடி பரப்பு இடத்தில் கட்டமைப்பு அமைத்தால், 10 சதவீதத்தை திறந்தவெளி இடமாக பொது பயன்பாட்டிற்கு ஒதுக்க வேண்டும். இந்த இடத்தை, மாநகராட்சி கமிஷனர் பெயரில், தானப்பத்திரமாக பதிவு செய்து வழங்க வேண்டும்.இதில், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகளை மாநகராட்சி செய்யும். இதுபோன்று வழங்கும் இடங்கள் மற்றும் ஏற்கனவே மாநகராட்சி வசம் உள்ள இடங்கள், சில பகுதிகளில் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆவணங்களை வைத்து, அளக்கும் போது ஆக்கிரமிப்பு சம்பவம் வெளியே வரும். அதை மீட்கவும் திட்டம் வகுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதனால், மாநகராட்சி சொத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள நபர்களுக்கு சிக்கல் ஏற்படும்.

இனி எல்லாம் எளிது

இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:அப்போது 'அம்மா' உணவகங்கள்; இப்போது நகர்ப்புற சுகாதார நிலையங்கள் கட்ட இடம் தேடியதில், பல்வேறு சிரமங்களை அனுபவித்தோம்.மாநகராட்சி சொத்துகளை அடையாளம் காண்பது, ஆவணங்களை சேர்ப்பதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. மாநகராட்சி சொத்து என தெரிந்தே, ஏமாற்றி விற்பது, ஏமாற்றி வாங்கி பின் நீதிமன்றத்தை நாடுவதும் நடக்கிறது. இதனால், சாலை, பூங்கா, மயானம், மைதானம், கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், மாநகராட்சி இணையத்தில் பதிவேற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, ஆக்கிரமிப்புகளை தடுத்து, திட்டங்களை எளிதில் செயல்படுத்த முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை