தி.நகர், வடபழனி பேருந்து நிலையங்கள் மழைக்காலத்தில் குளமாவதால் அதிருப்தி
சென்னை: 'தி.நகர் மற்றும் வடபழனி பேருந்து நிலையங்கள், நவீனமயமாக்கப்படும்' என, அமைச்சர் அறிவித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும், எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், பயணியர் நலனை கருத்தில் கொண்டு இப்பேருந்து நிலையங்களை சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம், 1972ம் ஆண்டு, ஜனவரியில், 'பல்லவன் போக்குவரத்துக் கழகம்' என்ற பெயரில் தமிழக அரசால் துவக்கப்பட்டது. அன்று தண்டையார்பேட்டை, அடையாறு, அயனாவரம், வடபழனி, அம்பத்துார், மாதவரம் ஆகிய 6 பேருந்து நிலையங்கள் செயல்பட்டன. அதன் பின், 1973ல் கே.கே., நகர், அண்ணா நகர், தி.நகர், மந்தைவெளி ஆகிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டன.தற்போது மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ், 31 பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில், பல பேருந்து நிலையங்கள், 50 ஆண்டு காலமாக இயங்கி வருகின்றன.இந்த பேருந்து நிலையங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், பல பேருந்து நிலையங்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. தி.நகர்
சென்னை மாநகரின் முக்கிய வர்த்தக மையமாக உள்ள தி.நகரில், ஏராளமான தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.இதனால், தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையம், சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில், பேருந்து நிலையம் முழுதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. தற்போது, தி.நகரில் மேம்பாலம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து மாம்பலம் ரயில் நிலையத்திற்கு, ஆகாய நடைபாதையும் அமைக்கப்பட்டது.ஆனால், பேருந்து நிலையம் மட்டும், இன்னும் சீரமைக்கப்படாமல், மோசமான நிலையில் உள்ளது. இதேபோல் வடபழனி, கே.கே., நகர், திருவொற்றியூர், பிராட்வே, திருவான்மியூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பேருந்து நிலையங்களும் மழைக்காலங்களில் குளமாக மாறுவது வாடிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த பேருந்து நிலையங்களை பருவமழைக்கு முன் சீரமைத்து, பயணியர் சிரமத்தை போக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.