பினாங்கு தீவுக்கு தினசரி விமான சேவை
சென்னை, சென்னையில் இருந்து மலேஷியா நாட்டின் பினாங்கு தீவுக்கு, இண்டிகோ நிறுவனம், வரும் டிச., 21 முதல், தினசரி விமான சேவையை துவக்குகிறது.மலேஷியா நாட்டின் பினாங்கு தீவில், தமிழ் பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள், தமிழகத்துக்கு தினசரி மற்றும் அவசர காலங்களில் வந்து செல்வதற்கு, தினசரி மற்றும் நேரடி விமான சேவைகள் வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, வரும் டிச., 21ல் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், பினாங்கிற்கு நேரடி தினசரி விமான சேவை வழங்க உள்ளது.இதன்படி, சென்னையில் இருந்து அதிகாலை, 2:15 மணிக்கு புறப்படும் விமானம், 6:40 மணிக்கு பினாங்கு சென்றடையும். பினாங்கில் இருந்து இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு புறப்படும் விமானம், காலை 10:30 மணிக்கு சென்னை வந்தடையும். இதில், 150க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்யும் வகையில், ஏர்பஸ் ஏ - 320 ரக வகை விமானம் இயக்கப்பட உள்ளது.