உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பார்கின்சன் பாதிப்புக்கு பிரத்யேக மையம்: அப்பல்லோவில் திறப்பு

 பார்கின்சன் பாதிப்புக்கு பிரத்யேக மையம்: அப்பல்லோவில் திறப்பு

சென்னை: நடுக்குவாதம் மற்றும் ஆழ்நிலை மூளை துாண்டல் சிகிச்சைக்காக, பிரத்யேக மருத்துவ மையத்தை, தமிழகத்திலேயே முதல் முறையாக அப்பல்லோ மருத்துவமனை துவக்கியுள்ளது. 'பார்கின்சன்' எனும் நடுக்குவாத பாதிப்புக்கு உள்ளானோருக்கு ஒருங்கிணைந்த மருத்துவக் கண்காணிப்புகள் அனைத்தும், ஒரே இடத்தில் வழங்கும் வகையில், பிரத்யேக மையத்தை, சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று துவங்கியுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனை முதுநிலை நரம்பியல் நிபுணரும், உடல் இயக்க குறைபாடு வல்லுனருமான பி.விஜய்சங்கர் கூறியதாவது: மரபணு பாதிப்பு, புறச்சூழல் மற்றும் வயோதிகம் காரணமாக, நடுக்குவாத பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த நோய்க்கான பரிசோதனைகளுக்கோ, ஆழ்நிலை மூளை துாண்டல் சிகிச்சைக்கோ, பிரத்யேக சிகிச்சை மையங்கள் எங்கும் இல்லை. வழக்கமான நரம்பியல் மருத்துவத் துறையிலேயே, அவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இந்நிலையில்தான் அப்பல்லோ மருத்துவமனை, தனித்துவமிக்க சிறப்பு மையத்தை துவக்கியுள்ளது. இதில், நடுக்குவாதத் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள மருத்துவர்கள் உள்ளனர். அதேபோல், அதிநவீன சிகிச்சை கட்டமைப்புகளும் உள்ளன. நடுக்குவாதத்தில் பாதிக்கப்பட்டோருக்கு சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படலாம்; பெருங்குடலில் பிரச்னைகள் வரலாம்; நினைவாற்றல் இழப்பு, பேச்சு குளறுதல் என, பல்வேறு பாதிப்புகள் படிப்படியாக வரக்கூடும். அவை அனைத்துக்கும் ஒவ்வொரு துறையாக சென்று சிகிச்சை பெறுவதற்கு பதிலாக, ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளை வழங்குவதே எங்களது நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ