அவதுாறு பரப்பும் தி.மு.க., கவுன்சிலர் அ.தி.மு.க., பெண் கவுன்சிலர் கொதிப்பு
சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், மூன்று தி.மு.க., மூன்று அ.தி.மு.க., மற்றும் ஒரு பா.ஜ., கவுன்சிலர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கவுன்சிலர்கள் பேசுகையில், 'ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற வேண்டும். குடுமியாண்டி தோப்பு பகுதியில் வெள்ளம் தேங்குவதை தடுக்க வேண்டும்.'இ.சி.ஆரில் மாடுகளால் விபத்துகள் நடக்கின்றன. ஓ.எம்.ஆர்., அணுகு சாலை சேதமடைந்துள்ளதால், அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. செம்மஞ்சேரியில் பூங்காவில் இருந்து எடுத்த 50 லோடு மண் எங்கே சென்றது என கண்டுபிடிக்க வேண்டும்' என்றனர்.தொடர்ந்து, 196வது வார்டு, அ.தி.மு.க., கவுன்சிலர் அஸ்வினிகருணா பேசியதாவது:என் அப்பா அ.தி.மு.க., பகுதி செயலர். 195வது வார்டில், வடிகால் கட்டும்போது கட்சிக்காரர் வீட்டு சுவரை இடித்ததை கட்டி கொடுக்க, அதிகாரிகளிடம் பேசினார். அதை, என் வார்டில் நடந்ததாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பரப்பியதால், எனக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது.சென்னையில் உள்ள 84 பெண் கவுன்சிலர்களுக்கு, அவர்கள் தந்தை, கணவர் தான் பக்கபலமாக உள்ளனர். அதுபோல், என் அப்பா எனக்கு உறுதுணையாக உள்ளார். நான் வேறு சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால், எனக்கு எதிராக செயல்படுகின்றனர். இதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ., கவுன்சிலர் தான் காரணம்.இவ்வாறு அவர் பேசினார்.இக்குற்றச்சாட்டு குறித்து, 195வது வார்டு, தி.மு.க., கவுன்சிலர் ஏகாம்பரத்திடம் கேட்டபோது, ''சமூக ஊடகத்தில் வந்ததை பார்த்து தான், என் வார்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிந்தது.அதிகாரிகளுக்கும், கவுன்சிலர் தந்தைக்கும் உள்ள விவகாரம். இதில், நான் தலையிடவில்லை. எந்த சமூகத்தையும் நான் குறைத்து மதிப்பிட்டதில்லை. நான் மக்களுக்கு செய்யும் சேவை பிடிக்காமல், காழ்ப்புணர்ச்சியில் அ.தி.மு.க., கவுன்சிலர் பேசுகிறார்,'' என்றார்.கூட்டத்தில், சாலை வெட்டு, மயானபூமி சீரமைப்பு உள்ளிட்ட, 88 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
'கொத்தாக துாக்கி நசிக்கிடுவேன்'
மண்டலத்தில், 195வது வார்டு கவுன்சிலர் ஏகாம்பரம். இங்குள்ள நேரு நகரில் அ.தி.மு.க., நிர்வாகி உதயகுமார் வீடு உள்ளது. வடிகால் கட்டும்போது, இவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதை சீரமைத்து கொடுப்பதில், உதயகுமாருக்கும், ஒப்பந்த நிறுவனத்திற்கும் பிரச்னை உள்ளது. இதில் உதயகுமாருக்கு ஆதரவாக, அ.தி.மு.க.,வின் பகுதி செயலர் என்ற அடிப்படையில், 196வது வார்டு கவுன்சிலர் அஸ்வினியின் தந்தை கருணா, ஆதரவாக இருந்தார்.அப்போது கருணா பேசியதாவது:பொறியாளர்கள் பேச வேண்டும். உதவியாளர்களை வைத்து பேசினால், என் ஆட்கள் எப்படி இருப்பார்கள் என்று தெரியாது. போராட்டம், கலாட்டா என, பிரச்னை செய்வேன். தாங்க முடியாது.இதுவே எங்கள் ஆட்சியாக இருந்தால், பொறியாளரை கொத்தாக துாக்கி வந்து, ஒரே நசுக்கு நசுக்கிடுவேன். என்கிட்ட வச்சுக்கிடாதீங்க. இடித்த சுவரை கட்டி கொடுங்க. இல்லையென்றால், யார் புகார் தெரிவித்தார்களோ, அவர்கள் வீட்டை ஆய்வு செய்து விதிமீறி கட்டினால் இடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி அதிகாரிகளை பார்த்து அவர் பேசிய இந்த சம்பவம், மண்டல கூட்டத்தில் விவாதமானது.