அடையாறு: ''பெசன்ட் நகரில் தரம் இல்லாமல் அமைத்த புதிய சாலை, லேசான மழைக்கே சேதமடைந்துவிட்டது,'' என, அடையாறு மண்டல குழு கூட்டத்தில், கவுன்சிலர் ராதிகா பேசினார். அடையாறு மண்டலக்குழு கூட்டம், அதிகாரி செந்தில்குமார் முன்னிலையில், மண்டல தலைவர் துரைராஜ் தலைமையில் நேற்று நடந்தது. கவுன்சிலர்கள் பேசியதாவது: மோகன் குமார், தி.மு.க., 168வது வார்டு: கிண்டியில் பேருந்து நிறுத்தம் அமைக்க பூஜை போட்டு ஒரு மாதமாகியும் பணி துவங்கவில்லை. வண்டிக்காரன் தெருவில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியை மாற்ற வேண்டும். கதிர் முருகன், அ.தி.மு.க., 170வது வார்டு: கோட்டூர்புரம் மாநகராட்சி பள்ளியில் மேம்பாட்டு பணிகளை, ஆறு மாதங்களாகியும் துவங்கவில்லை. கீதா, தி.மு.க., 171வது வார்டு: கிரீன்வேஸ் சாலையில், பள்ளங்களால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். உயிர்பலியை தடுக்க, சேதமடைந்த மின் வினியோக பில்லர்களை சீரமைக்க வேண்டும். சுபாஷினி, காங்கிரஸ், 173வது வார்டு: இந்திரா நகர், திருவான்மியூரில் குறிப்பிட்ட நாளில் மின் கட்டண ரீடிங் எடுக்காததால், தேவையில்லாத அபராதம் செலுத்த வேண்டி உள்ளது. ராதிகா, தி.மு.க., 174வது வார்டு: பத்மநாப நகரில் வடிகால்வாய் கட்டாததால் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. பெசன்ட் நகரில் பல தெருக்களில் அமைத்த புது சாலைகள் லேசான மழைக்கே சேதமடைந்தன. விசாலாட்சி, தி.மு.க., 180வது வார்டு : திருவான்மியூர் விளையாட்டு மைதானங்களில், பராமரிப்பு ஊழியர்கள் நியமிக்காததால் மைதானம் வீணாகின்றன. கவுன்சிலர் நிதி ஒதுக்கியும் ரேஷன் கடை, மணிக்கூண்டு கட்டும் பணியை துவங்கவில்லை. இவ்வாறு அவர்கள் பேசினர். தொடர்ந்து, சாலை சீரமைப்பு, வடிகால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு, 20 தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.