உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டூழியம் செய்த எட்டு பேர் கைது

அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து அட்டூழியம் செய்த எட்டு பேர் கைது

சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில், அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்து, பணம் மற்றும் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் உட்பட, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ராயப்பேட்டை நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் ஜெய்னுல் அனீப், 28. இவர், அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இரு தினங்களுக்கு முன், இரவு 11:00 மணிக்கு, ஆயிரம் விளக்கு, மக்கீஸ்கார்டன் காளியம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளார். அவர், மக்கீஸ்கார்டன் பகுதியை கடக்க முயன்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். அவர்களிடம், நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக கூறியுள்ளார். ஆனால், ஜெய்னுல் அனீப்பை, அவரின் நண்பர்கள் தங்கி இருந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு, அந்த மர்ம நபர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களை கத்தியை காட்டி மிரட்டி, 'ஜிபே' வாயிலாக, 1,500 ரூபாயும், மொபைல் போனையும் பறித்துள்ளனர். மேலும், கதவை வெளிப்புறம் பூட்டி விட்டு காரில் தப்பினர். இதையடுத்து, அடுக்குமாடியில் குடியிருப்போர் உதவியுடன் வெளியே வந்த ஜெய்னுல் அனீப், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி அபிஷேக், 21, மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த ரவுடி வசந்த், 25, ரித்திஷ், 19, மற்றும் இவர்களின் கூட்டாளிகள் என, எட்டு பேர், கத்தியை காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி வசந்த் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஐந்து மொபைல் போன்கள், இரண்டு கத்திகள், கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி