கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதி அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் இடித்து அகற்றம்
கிண்டி, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்திற்காக, அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. இதில், 17 கடைகள் அகற்றப்பட்டன.கடந்த 2015ம் ஆண்டு, 38 அடி அகலமாக இருந்த கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை, வாகன போக்குவரத்திற்கு ஏற்ப, 2.10 கோடி ரூபாயில், 60 அடி அகலமாக மாற்றி மேம்படுத்தப்பட்டது. இதற்காக, ரேஸ்கோர்ஸ் தடுப்புச் சுவரை அகற்றி, 10 கிரவுண்ட் இடம் கையகப்படுத்தப்பட்டது.ஆனாலும், வாகன நெரிசல் அதிகரித்து, அடிக்கடி விபத்துகள் நிகழ்வது தொடர்கிறது. அதனால், ரேஸ்கோர்ஸ் வசமிருந்த இடத்தை, மாநகராட்சி கையகப்படுத்தியது. அந்த இடத்தில் குறிப்பிட்ட சில பகுதி, சாலை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.இந்நிலையில், சென்னை கலெக்டர் உத்தரவின்படி, மாநகராட்சி மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கத்திற்காக, அங்கு அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.அங்குள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு, வருவாய்துறை சார்பில் முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதையடுத்து, கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பவானி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஏழு கடைகள், அரசு நிலத்தில் உள்ள 10 கடைகளை அகற்றும் பணி, கிண்டி தாசில்தார் மணிமேகலை தலைமையில், மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவலர்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று துவங்கியது.ஆக்கிரமிப்பு அகற்றத்தை தடுத்த வியாபாரிகள், தங்கள் பொருட்களை எடுத்து வைக்க கால அவகாசம் கேட்டனர்.ஆனால், முறைப்படி நோட்டீஸ் வழங்கியதை உதாசீனப்படுத்தியதால், அதிகாரிகள் அவகாசம் வழங்க மறுத்துவிட்டனர்.இதையடுத்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்பு கடைகள், கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.