மகளுக்கு பாலியல் தொந்தரவு தந்தைக்கு 20 ஆண்டு சிறை
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில், திருவான்மியூரைச் சேர்ந்த 49 வயதான நபர் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த 2023ம் ஆண்டு, தன் 5 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெரியம்மா, நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.போலீசாரின் விசாரணையில், பெற்ற மகளுக்கே அந்த நபர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளது எனக் கூறி, அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.